மூடப்பட்ட கல்பாக்கம் அணு உலை செயல்பட தொடங்கியது
கல்பாக்கம்:
சுனாமி தாக்குதலையடுத்து மூடப்பட்ட கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலை மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளது.
இங்கு கடல் நீரைக் கொண்டு தான் அணு உலையின் வெப்பம் தணிக்கப்படுகிறது. இதனால் தான் கடலோரத்தில் இந்த மின் நிலையம்அமைக்கப்பட்டது.
ஆனால், கடந்த வாரம் சுனாமி தாக்கியபோது அணு உலைக்கு கடல் நீரைக் கொண்டு செல்லும் குழாய்கள் பயங்கர சேதமடைந்தன. மேலும்புதிதாகக் கட்டப்பட்டு வரும் அணு உலையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.
மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பும் கடும் சேதமடைந்தது. குடியிருப்புக்கள் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டு மரங்களில் குத்திநின்றன. பல கார்களை கடல் அலைகள் இழுத்துச் சென்றுவிட்டன.
அணு மின் நிலைய ஊழியர்கள் 5 பேர் பலியாயினர். மொத்தம் இப் பகுதியில் 100க்கும் அதிகானவர்கள் இறந்தனர்.
அணு உலைக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் பரவியதால் கதிர்வீச்சுக்குப் பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் அப் பகுதியை விட்டுவெளியேறினர். அணு உலை சேதமடைந்ததா இல்லையா என்று தெரியாமல் அதிகாரிகளும் குழம்பினர்.
மக்களை அவசரமாக வெளியேற்றினர். இதையடுத்து சென்னை, மும்பை, டெல்லியில் இருந்து விரைந்து வந்த விஞ்ஞானிகள் அணு மின்நிலையத்தை சோதனையிட்டு அணு உலைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.
ஆனாலும் இரண்டாவது அணு உலையின் இயக்கத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.
இந் நிலையில் 220 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட அந்த உலை இப்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாகஅணு சக்தித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழக மின் கிரிட்டில் மீண்டும் சேர்க்கும் பணி இன்று இரவு நடக்கவுள்ளது.
பத்திரமாய் வந்து சேர்ந்த உலை:
இதற்கிடையே ரஷ்யாவில் இருந்து கல்பாக்கம் மின் நிலையத்துக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட அணு உலையின் இதயம் போன்றமுக்கியப் பகுதி இன்று பத்திரமாக தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்தது. இதன் மதிப்பு ரூ. 1,300 கோடியாகும்.
கடந்த மாத ஆரம்பத்தில் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து இந்த அணு உலையுடன் கூடிய மாபெரும் கப்பல்தூத்துக்குடிக்குக் கிளம்பியது. கடந்த 26ம் தேதி தமிழகத்தை சுனாமி தாக்கியபோது இந்தக் கப்பல் தூத்துக்குடியை நெருங்கிக்கொண்டிருந்தது.
ஆனாலும் அலைகளால் இந்தக் கப்பலுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.