ஊட்டி ரோஜா பூங்காவுக்கு சர்வதேச அங்கீகாரம்?
ஊட்டி:
ஊட்டியில் உள்ள ரோஜாப் பூங்காவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மலைகளின் ராணி எனப் புகழப்படும் ஊட்டியில் கடந்த 1995ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் ரோஜாப்பூங்கா உருவாக்கப்பட்டது. 4 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ரோஜாப் பூங்கா, ஊட்டி தாவரவியல் பூங்காவின் 100வதுஆண்டு விழாவை முன்னிட்டு உருவாக்கப்பட்டது.
ஊட்டி ரோஜாப் பூங்காவில் ஆரம்பத்தில் மொத்தம் 1,919 வகையான ரோஜாக்கள் இருந்தன. தற்போது 2,800 ரோஜா செடிகள் இங்குவைக்கப்பட்டுள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த ரோஜாப் பூங்கா தற்போது சர்வதேச அங்கீகாரம் பெறும்வாய்ப்பைப் பெற்றுள்ளது.
இத்தாலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச ரோஜா சம்மேளனம் என்ற அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுஊட்டி ரோஜாப் பூங்காவை பார்வையிட்டு அதற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது.
சர்வதேச ரோஜா சம்மேளனத்தின் துணைத் தலைவர் ஹெல்கா பிஜ்ஜட், காப்பாளர் மீனா பிம்பிளோப, கொடைக்கானலைச் சேர்ந்த ரோஜாசெடி வளர்ப்பாளரான கிரிஜா விஜயராகவன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் ரோஜாப் பூங்காவை சுற்றிப் பார்த்தனர். ரோஜாப் பூங்கா மிகவும் சிறப்பாக
பராமரிக்கப்பட்டு வருவதாக ஹெல்கா பாராட்டு தெரிவித்தார்.
ரோஜாப் பூங்காவின் தோட்டக் கலை அதிகாரி முருகானந்த், தோட்டக்கலை துணை இயக்குநர் பெல்லி ஆகியோருடனும் இக்குழுவினர்ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஹெல்கா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊட்டி ரோஜாப் பூங்காவுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவது தொடர்பானஎங்களது பரிந்துரை மற்றும் ஆய்வு அறிக்கையை சர்வதேச ரோஜா சம்மேளனத்திடம் அளிப்போம். சம்மேளனத்தின் அடுத்த கூட்டத்தில்இதுதொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார்.
ஊட்டி ரோஜாப் பூங்காவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால், இந்தியாவிலேயே இதுபோன்ற அங்கீகாரம் பெறும் முதல் பூங்கா என்றபெயரை ஊட்டி பெறும். இதுவரை உலக அளவில் மொத்தம் 14 ரோஜாப் பூங்காக்கள்தான் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.