விஜயேந்திரர் கைது: 15 நாள் கோர்ட் காவல்
காஞ்சிபுரம்:
காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் இன்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள்நீதிமன்றக் காவலில் வைக்க காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் இன்று புதிய திருப்பம் ஏற்பட்டது. போலீஸாரால் இரண்டு முறை விசாரிக்கப்பட்டிருந்தஇளையவர் விஜயேந்திரர் இன்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இன்று மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு போலீஸ் படை விரைந்தது. 50க்கும் மேற்பட்ட போலீஸார்மடத்திற்குள் நுழைந்தனர். அதே சமயத்தில் மடத்திற்கு வெளியேயும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதனால் மடத்திற்கு வெளியேயும், மடத்திற்குள்ளேயும் பரபரப்பு ஏற்பட்டது. எதற்காக போலீஸ் படை மடத்திற்குள் நுழைந்ததுஎன்பது யாருக்கும் புரியாமல் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
சிறிது நேரத்திற்குப் பின்னர் விஜயேந்திரரை போலீஸார் கைது செய்து வெளியே அழைத்து வந்தனர். அவர் மீது கொலைக் குற்றம்உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விஜயேந்திரர் காஞ்சிபுரம் காட்டுபங்களாவிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு விசாரணை முடிந்த பின்பு முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜ் முன்புஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதியிடம், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தவறு என்றும், நான் தவறாக ஏதும் செய்யவில்லை என்றும் விஜயேந்திரர்கூறினார். தான் செய்து வரும் தனுர் மஸ்ய பூஜையை இன்று முடிக்க அனுமதி தருமாறும் கோரினார்.
ஆனால் நீதிபதி உத்தமராஜ், விஜயேந்திரரை வருகிற 24ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதனையடுத்து விஜயேந்திரர் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சங்கரராமன் கொலையில் இதுவரை ஜெயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சி மடத்தைச்சேர்ந்தவர்களில் விஜயேந்திரர் மட்டுமே கைது செய்யப்படாமல் இருந்து வந்த முக்கியஸ்தர் ஆவார். தற்போது அவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதால் காஞ்சி மடத்திற்குத் தலைமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சி சங்கர மட வரலாற்றில் போலீஸ் படை பெருமளவில் உள்ளே புகுந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு இன்று காலை தான் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் வெளியேவரவுள்ள சூழ்நிலையில் இளையவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விஜயேந்திரரின் தம்பி ரகு ஏற்கனவே இதேவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.