சுனாமியை வைத்து மோசடி: வாலிபர் கைது
கும்பகோணம்:
உயிருடன் இருக்கும் மனைவி சுனாமி தாக்குதலில் இறந்துவிட்டதாகக் கூறி நிவாரண நிதி பெற முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஜோன் சாலமன் (38). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு வாரத்துக்கு முன் வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்குச் சென்ற சாலமன், தனது மனைவி இங்கு வந்தபோது சுனாமி தாக்குதலில் இறந்து போய்விட்டதாக புகார் தந்தார்.
இதை நம்பி வழக்கைப் பதிவு செய்த போலீசார் கொடுத்த எப்ஐஆர் காப்பியுடன் நாகப்பட்டிணம் சென்று அதிகாரிகளை சந்தித்து நிவாரண நிதி கேட்டார் சாலமன். அவர்கள் கும்பகோணம் கிராம அதிகாரியிடம் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறி அனுப்பினர்.
இதையடுத்து கிராம அதிகாரியை அணுக சாலமன் சான்றிதழ் கேட்க, விசாரித்துப் பார்த்த அதிகாரிகளுக்கு சாலமனின் மோசடிச் செயல் தெரியவந்தது. இதையடுத்து சாலமனை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தார் அதிகாரி.
பொன்னையன் வழங்கிய நிவாரண நிதி:
இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினருக்கு ரூ. 2.9 கோடி மதிப்பிலான நிவாரண நிதியை இன்று நிதியமைச்சர் பொன்னையன் வழங்கினார்.