வங்கி கணக்குகள் முடக்கலை எதிர்த்து ஜெயேந்திரர் வழக்கு
சென்னை:
சங்கர மட வங்கிக் கணக்குகளை முடக்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் வழக்குப் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள மனுவில், சங்கரராமன் கொலை வழக்கில் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். உச்சநீதிமன்றம் என்னை ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.
சங்கர மடத்தின் வங்கிக் கணக்குகளை தனிப்படை போலீஸார் முடக்கி வைத்துள்ளனர். மொத்தம் 183 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.இந்த பணத்தின் மூலமாகத்தான் பூஜைகள், பக்தர்களுக்கு உணவு, அன்னதானம், 100 பசுக்கள் பராமரிப்பு, ஊழியர்களுக்கு சம்பளம்வழங்கப்பட்டு வந்தது.
மத சம்பந்தமான நடவடிக்கைகளுக்கும் இந்தப் பணம்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் இவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. சங்கர மட நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.பூஜைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மடத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளதை நீக்கி உத்தரவிட வேண்டும் என்றுகோரியுள்ளார்.
நிதிப் பற்றாக்குறை காரணமாக சங்கர மடத்தின் மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு அடுத்த மாதம் பாதிசம்பளம் தான் வழங்கப்படும் என்று வாய்மொழியாகக் கூறப்பட்டுள்ளதாக மடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.