சென்னை மாநகராட்சியில் மீன் விருந்து
சென்னை:
சுனாமியால் மீன்களில் வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை மக்களுக்கு விளக்கும் விதமாக சென்னை மாநகராட்சியில் இன்று மீன்விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வீசிய சுனாமி அலையால் ஆயிரக்கணக்கான உயிர்களும், பெரிய அளவிலான பொருட் சேதமும் ஏற்பட்டது. இந்நிலையில் கடலில் வைரஸ், பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற செய்தி பரவியதால் மீன் விற்பனை படு மோசமானவீழ்ச்சியை சந்தித்தது.
தொற்று நோய் பயம் காரணமாக மீன் வாங்குவதை மக்கள் நிறுத்தி விட்டனர். இதனால் மீன் வியாபாரம் அடியோடு படுத்துவிட்டது. இந் நிலையில், மீன் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்களிடையே மீன் சாப்பிடுவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் இன்று மீன்விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சிக் கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினர்கள் ஜபருல்லா, சேகர், உல்லாசவேலன் ஆகியோர்கூறுகையில், மீன் வியாபாரம் படுத்து விட்டதால் ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மேலும் மோசமானநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களது நல்வாழ்வை கருத்தில் கொண்டு மீன் உணவு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதத்தில் மீன்விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
இதை ஏற்ற துணை மேயர் கராத்தே தியாகராஜன் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 11 மணிக்கு மாநகராட்சி வளாகத்தில் மீன்விருந்து நிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்தார்.