ஜெயேந்திரருக்கு சம்மன்: 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் நாளை மறுதினம் குற்றப் பத்திரிக்கை நகல்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயேந்திரருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் 25 பேர் மீதுகுற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஜெயேந்திரர் மட்டுமே வெளியில் உள்ளார். இந்த வழக்கில் முதல்குற்றவாளியாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
1,873 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையின் நகல் எடுக்கும் பணி கடந்த 15 நாட்களாக இரவு பகலாக நடந்தது. இதற்காகரூ. 20 லட்சம் செலவில் புதிய ஜெராக்ஸ் மெஷின் வாங்கப்பட்டது.
இந்த நகல் எடுக்கும் பணி முடிந்துவிட்டதால் அவை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வழங்கப்படவுள்ளது. இதற்காக இந்த 25பேரும் வரும் வியாழக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டுள்ளார்.
25 பேரில் ஒருவர் வராவிட்டால் கூட குற்றப் பத்திரிக்கையின் நகல் வழங்க முடியாது. நகலை வழங்கிவிட்டால் கொலைவழக்கின் விசாரணை உடனடியாக ஆரம்பித்துவிடும். இதனால் 10ம் தேதி அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிடகாஞ்சிபுரம் தனிப்படைப் போலீசார் மிக மும்முரமாக உள்ளனர்.
இதனால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி பிறப்பிக்கப்பட்ட சம்மன் உத்தரவை சின்ன காஞ்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒருகாவலர் கலவைக்குச் சென்று நேரடியாக ஜெயேந்திரரிடம் வழங்கினார்.
ஜெயேந்திரர் தவிர மற்ற அனைவரும் சிறைகளில் உள்ளதால் அவர்களை ஆஜர்படுத்துவதில் சிக்கல் இருக்காது என்றேதெரிகிறது.
குற்றப் பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்ட பின் கொலை வழக்கு எந்த நீதிமன்றத்தில் நடக்கும் என்பதை செங்கல்பட்டு செசன்ஸ்நீதிமன்றம் முடிவு செய்யும்.
இந்த வழக்கு விசாரணையை 5 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.