சு.சுவாமிக்கு எதிர்ப்பு: விஎச்பி தொண்டர் தற்கொலை முயற்சி!
சென்னை
விஸ்வ இந்து பரிஷத் மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விஎச்பிதொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் கூட்டம் சனிக்கிழமை இரவு நடந்தது.சங்கராச்சாரியார்கள் கைதைக் கண்டித்து நடந்த இக் கூட்டத்தில், சங் பரிவாரின் புதிய நண்பராக அவதாரம் எடுத்துள்ளசுப்பிரமணியம் சுவாமியும் கலந்து கொண்டார்.
மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, வி.எச்.பி. தலைவர் கிரிராஜ் கிஷோர், பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன்உள்ளிட்டோர் பேசிய இக் கூட்டத்தில் சுவாமியும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் சுவாமி பேசத் தொடங்கியபோது விஎச்பி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால்சலசலப்பு ஏற்பட்டது. திருவொற்றியூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் சுப்பிரமணிய சுவாமி ஒழிக என்று கூறிக் கொண்டேமயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போதுதான் அவர் சுவாமியைகண்டித்து எலி மருந்து சாப்பிட்டிருந்தது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினர்.
சமீப காலம் வரை பாஜக உள்பட சங் பரிவார் அமைப்புகளை குண்டக்க மண்டக்க தாக்கி வந்தவர் சுவாமி என்பதுகுறிப்பிடத்தக்கது. அதே போல ராஜிவ் காந்தி ஆட்சியின்போது சங்கர மடத்துக்கு சுவாமி தந்த தொல்லைகள் கணக்கில்அடங்காதவை என்பதை ஜெயேந்திரரே மனம் நொந்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அரசியலில் கூடு விட்டு கூடு பாய்வதில் வல்லவரான சுவாமி இப்போது சங் பரிவாரை ஆதரிப்பதோடு, ஜெயேந்திரை ஆதரித்துவருகிறார்.
ஆனால், இவர் தங்கள் அணி பக்கம் வருவதை சங் பரிவார் அமைப்புகளின் தொண்டர்கள் ரசிக்கவில்லை.