வீரப்பன்: 1 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான ஆர்.டி.ஓ. விசாரணையை ஒரு மாதத்திற்குள் முடிக்க சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீரப்பன் கொல்லப்பட்டதில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வீரப்பனின்மனைவி முத்துலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி சிவசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கே.டி.எஸ்.துள்சி ஆஜரானார். அவர் வாதிடுகையில், வீரப்பனை சுட்டுக் கொன்றது தொடர்பாக ஏற்கனவே ஒரு புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே ஒரே வழக்கில் இரு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்ய முடியாது.
ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 2 வாரத்தில் அது முடிவடைய உள்ளது.
இவ் விசாரணைக்குப் பின் இந்த வழக்கில் தீர்ப்பு கூறலாம். வீரப்பன் ஒரு சமூக விரோதி, சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகஇருந்தவன். அவனது விஷயத்தில் உரிமையைப் பார்க்க முடியாது. ஒருவரைப் பிடிக்கும்போது தாக்குதல் நடத்தினால்அவர்களை சுடுவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றார் துள்சி.
இதைத் தொடர்ந்து நீதிபதி சிவசுப்ரமணியம், சிபிஐ விசாரணை கோரும் மனுவை டிவிஷன் பெஞ்சுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், முத்துலட்சுமியின் புகாரை போலீஸார் நிராகத்தது நியாயமானதல்ல. புகார் கொடுத்தால் அதைப் பதிவு செய்வதுகாவல்துறையினரின் கடமை. ஆர்.டி.ஓ. விசாரணை முடிவடைந்த பிறகு முத்துலட்சுமியின் புகாரை போலீஸார் பதிவு செய்யவேண்டும்.
ஆர்.டி.ஓ. விசாரணை 3 மாதமாக நடக்கிறது. அதை ஒரு மாதத்திற்குள் முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.