தமிழகம் முழுவதும் பாதயாத்திரை கிளம்பும் ஜெயேந்திரர்!
சென்னை:
தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள ஜெயேந்திரர் திட்டமிட்டிருப்பதாக சங்கர மடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஜெயேந்திரர் தற்போது கலவையில் தங்கியிருக்கிறார். அவர் புதிதாக 2 திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
சங்கரபஜன் மண்டல் என்ற திட்டத்தின்படி, கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு ஆன்மீகப் பணிகளும், வேலை வாய்ப்பு பயிற்சியுடன் வேதம், மந்திரங்கள் கற்பிக்கும் பணியும் நடைபெறும்.
2வது திட்டமான பாரதீய பரிக்ரமா திட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார். கிராமம், கிராமமாக செல்லும் வகையில் பாதயாத்திரை பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு திட்டங்கள் மூலம் சங்கரமடத்தின் மீது அடித்தட்டு மக்களின் நம்பிக்கையையும், மடத்திற்கு வரும் மற்ற ஜாதி இந்துக்களின் எண்ணிக்கையையும் உயர்த்த ஜெயேந்திரர் திட்டமிட்டிருக்கிறார்.
மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் பாதயாத்திரை மேற்கொண்டபோது, பூஜைப்பொருட்களை எடுத்துச் செல்ல ஒரு ரிக்ஷா வண்டியை உபயோகப்படுத்தினார். அந்த வண்டியை மீண்டும் தயார் செய்யுமாறு ஜெயேந்திரர் உத்தரவிட்டிருக்கிறார்.
தனது நடைபயணத்தின்போது முக்கிய ஊர்களில் சங்கர மடத்தின் கிளைகளைத் தொடங்கவும், ஆன்மீக ஈடுபாடு கொண்ட இளைஞர்களை சாதி வித்தியாசமின்றி மடத்தில் சேர்க்கவும் திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இந்தத் திட்டங்களை ஜெயேந்திரர் அறிவிப்பார் என்று மடத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.