காவிரியில் 562 டிஎம்சி தண்ணீர் தேவை: தமிழகம்
டெல்லி:
பாசனம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை உபயோகத்துக்காக ஆண்டுக்கு 562 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுவதாக காவிரி நடுவர்மன்றத்தில் தமிழகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகம், கர்நாடகம் இடையே காவிரி நதி நீரைப் பங்கீடு செய்வது தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. கடந்த 1991ம் ஆண்டு, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று நடுவர்மன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்தது.
தற்போது நடுவர் மன்றத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக வழக்கறிஞர்கள் வாதம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந் நிலையில் தமிழகஅரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது வரும் தண்ணீரின் அளவு மாநிலத்தின் பாசனத்தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.
பாசனம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்காக தமிழகத்திற்கு 562 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. இக் கோரிக்கையைநடுவர் மன்றம் பரிசீலிக்க வேண்டும். காவிரி ஒப்பந்தம் அமலில் இருந்த 1924-1974 கால கட்டத்தில் இருந்த பாசனப் பரப்பையும்,1974-1990 ஆண்டு வரையிலான காவிரி பாசன விஸ்தரிப்பையும் நடுவர் மன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இப்போதும் உயிரோட்டமுடனும்,நியாயமானதாகவும் உள்ளன. எனவே இவற்றின் அடிப்படையிலேயே நீர்ப் பங்கீடு அமைய வேண்டும்.
இண்டஸ் கமிஷன், கிருஷ்ணா மற்றும் நர்மதா நீர் பங்கீடு நடுவர் மன்றங்கள் சம பங்கீடு கொள்கையை செயல்படுத்தியுள்ளன. காவிரிநடுவர் மன்றமும் இந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.
கர்நாடகம் ஆண்டுதோறும் பாசன பரப்பை அதிகரித்து வருவதாலும், குடிநீர். தொழிற்சாலைகளுக்கு அதிக அளவு தண்ணீரைப்பயன்படுத்துவதாலும், தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது.
எனவே கர்நாடகம் தனது பாசன பரப்பை விஸ்தரிப்பதை நடுவர் மன்றம் தடை செய்ய வேண்டும். மேலும் கோடைகால சாகுபடியையும்,குறுவை சாகுபடியையும் தவிர்க்க உத்தரவிட வேண்டும் என்று தமிழகத்தின் மனுவில் கூறப்பட்டுள்ளது.