அதிமுகவுக்கு அறிக்கை நகல் தர தேர்தல் ஆணையம் மறுப்பு
டெல்லி - சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியில் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் நகலை அதிமுகவிற்குத் தர தேர்தல்ஆணையம் மறுத்துவிட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், அதனால் ஒட்டுமொத்ததேர்தலையும் ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில்தெரிவித்தார்.
இதற்கு வசதியாக வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து தேர்தல் கமிஷன் நடத்திய விசாரணை அறிக்கையை தன்னிடம் வழங்கக் கோரிதேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம் அனுப்பியது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்தின் ஆவணமாகும். அது ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதாகும். எந்த மாநிலத்தில்தேர்தல் முறைகேடு நடந்தாலும் அது குறித்து விசாரணை நடத்துவது வழக்கம். பிரதமர், முதல்வர் தொகுதிகளில் புகார் வந்தால் கூட அதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் நகல்களை தந்தால், அது விசாரணை அதிகாரியின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.எனவே எந்த ஒரு மாநில அரசு கேட்டாலும், விசாரணை அறிக்கையின் நகல்களை வழங்க முடியாது என்றனர்.
இதையடுத்து இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் கிளப்ப அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நரேஷ் குப்தா ஆலோசனை:
இதற்கிடையே வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி நரேஷ் குப்தா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்பதற்காக ஒரு கூட்டத்தை நரேஷ் குப்தா இன்று கூட்டியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கலந்து கொள்ள தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.