ஹைதராபாத் ஓபன்: இறுதி போட்டியில் சானியா
ஹைதராபாத்:
ஹைதராபாத் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ரஷியாவின் மரியா கிரிலென்கோவை வீழ்த்தி, இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கால் இறுதியில் இஸ்ரேல் நாட்டவரான தஜி போராவை எதிர்த்து விளையாடிய சானியா மிர்ஸா 4-6, 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
மற்ற காலிறுதிப் போட்டிகளில மரியா கிரிலென்கோ (ரஷியா), அன்னா லெனா (ஜெர்மனி), அல்யோனா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்றனர். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா, மரியா கிரிலென்கோவை எதிர்த்து விளையாடினார்.
இதில் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் சானியா வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில அன்னா லெனா, அல்யோனாவை எதிர்த்து விளையாடுகின்றார். இவர்களில் யார் வெற்றி பெறுகிறாரோ, அவருடன் சானியா இறுதிப்போட்டியில் மோதுவார். கோப்பையை வெல்பவருக்கு 1,40,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இரட்டையர் ஆட்டத்தில் மார்ட்டினா நவரத்திலோவா - அன்னா லெனா ஜோடி, அகுல்- பனோவ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் 3-2 என்ற கணக்கில் நவரத்திலோவா ஜோடி முன்னணியில் இருந்தபோது, அன்னா லெனா காயமடைந்து போட்டியில் இருந்து விலகினார். இதனால் அகுல்- பனோவ் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.