கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி, மகள் தற்கொலை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் விவசாயி, தனது மனைவி 2 மகள்களுடன் விஷம் குடித்தார். இதில்விவசாயியும், அவரது ஒரு மகளும் பரிதாபமாக இறந்தனர்.
சங்கராபுரம் அருகே உள்ள தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சம்சுதீன். இவருக்கு சபீரா என்ற மனைவியும், உமர் யாசீரா, ராபியா பீஎன்ற இரு மகள்கள்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு இந்த நான்கு பேரும், கலெக்டரிடம் ஒரு மனுவைக் கொடுத்தனர். பின்னர்வெளியே வந்த அவர்கள் விஷம் குடித்தனர்.
சுருண்ட விழுந்த இந்த நால்வரையும் அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சம்சுதீன் மற்றும் ராபியா பீ ஆகியோர் இறந்தனர். மற்ற இருவரும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
சம்சுதீனுக்கும் அவரது அண்ணன்களான அல்லாபக்ஷ், அலாவுதீன் ஆகியோருக்கும் சொந்தமாக 1.16 ஏக்கர் நிலம் இருந்துள்ளது.
இதைப் பிரித்துக் கொண்டு 3 பேரும் விவசாயம் செய்து வந்தனர். இந் நிலையில் அலாவுதீனின் நிலத்தை வாங்கிய அல்லாபக்ஷ் அதைசம்சுதீனிடம் விற்றுள்ளார். சம்சுதீன் அந்த நிலத்தை தனது மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார்.
இந் நிலையில் சம்சுதீனிடம் விற்ற நிலத்தையே காதர்பாட்சா என்பவரிடமும் அல்லாபக்ஷ் விற்றுள்ளார். இதனால் சம்சுதீனுக்கும், காதர்பாட்சாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அலாவுதீனின் நிலத்தில் காதர் பாட்சாவும் பயிரிட முயன்றதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த 1994ம் ஆண்டு திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் சம்சுதீன் வழக்குத் தொடர்ந்தார். இதில் சம்சுதீனுக்குத்தான் நிலம்சொந்தம் என தீர்ப்பு வந்தது. ஆனால் இதை எதிர்த்து காதர்பாட்சா விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதிலும்சம்சுதீனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.
இருப்பினும் அதை ஏற்காத காதர் பாட்சா தொடர்ந்து சம்சுதீனுக்குப் பிரச்சினை கொடுத்து வந்துள்ளார். ஏழுமலை என்பவரை விட்டுசம்சுதீனுக்கு எதிராக போலீஸில் வன்கொடுமை புகார் கொடுக்கச் செய்துள்ளார்.
இதையடுத்து சம்சுதீன் மீது வன்கொடுமை சட்டத்தில் போலீஸார் புகார் பதிவு செய்தனர். அதன் பின்னர் தாசில்தார் விசாரணைக்கும்உட்படுத்தப்பட்டார்.
இந்த விவகாரங்களால் மனமுடைந்து போன சம்சுதீன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதற்கு முன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த அவர் ஆட்சித் தலைவரிடம் நடந்ததை புகாராக எழுதிக் கொடுத்து விட்டுவிஷம் அருந்தியுள்ளார்.
இப்போது இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் அல்லாபக்ஷ், காதர் பாட்சா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில்காதர்பாட்சா கைது செய்யப்பட்டுள்ளார். அல்லா பக்ஷ் தலைமறைவாகி விட்டார்.












Click it and Unblock the Notifications