பிப்ரவரியிலேயே தமிழகத்தை கொளுத்தும் வெயில்
சென்னை:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் வெயில் வீசி வருகிறது. வழக்கத்தை விட ஒரு மாதத்திற்கு முன்பே கோடை காலம்தொடங்கி விட்டதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவுகிறது. சுளீர் வெயில் மக்களை தாளித்து எடுக்கஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய உயர் அதிகாரி ரவிக்குமார் கூறுகையில், வழக்கமாக மார்ச்2வது வாரத்திற்குப் பின்னர்தான் கோடை காலம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கியுள்ளது.
காற்றின் திசை மாறியுள்ள காரணத்தினால்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்தளவுக்கு வெயில் வீசுவதற்கு சுனாமியால் ஏற்பட்ட கால நிலை மாற்றம் தான் காரணமா என்பதை வானிலைஆராய்ச்சியாளர்களால் கூற முடியாது. கடலியல் நிபுணர்கள்தான் இதை விளக்க வேண்டும்.
இருப்பினும் கடந்த ஆண்டுகளிலும் இதுபோல முன்கூட்டியே கோடை காலம் தொடங்கியுள்ளது. எனவே கடலில் ஏற்பட்டமாற்றங்களை மட்டும் இதற்குக் காரணமாக கூற முடியாது என்றார்.
இந்த ஆண்டு கோடை காலம் மிகக் கொடுமையாக இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறும் வகையில் இப்போது வெயில் அடித்துவருகிறது.
வெயில் காரணமாக தர்பூசனி, பதநீர், நொங்கு வியாபாரம் களை கட்டியுள்ளது. சென்னை நகரின் சாலையோரங்களில் தர்பூசனிமலை போல் குவித்து வைக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதேபோல, தொப்பிகள் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.