பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இந்தியா பஸ் போக்குவரத்து
டெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள முஸாபராபாத்துக்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பஸ் போக்குவரத்தைத் தொடங்க இந்தியாவும்பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதன் மூலம் 27 ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.
பஞ்சாபில் இருந்தும், காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானின் பிற நகர்களுக்கு பஸ், ரயில் போக்குவரத்து இருந்து வந்தாலும் பாகிஸ்தான்ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு வாகனப் போக்குவரத்தை இந்தியா தடை செய்து வைத்திருந்தது.
இதனால் இரு தேசங்களிலும் பிரிந்து வாழும் காஷ்மீரிகள் தங்கள் உறவுகளைச் சந்திக்க முடியாத சூழல் இருந்து வந்தது.
இந் நிலையில் இப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றுள்ளன. காஷ்மீருக்கும்தீவிரவாதிகள் ஊடுருவலும் பெருமளவு குறைந்துவிட்டது.
இதையடுத்து முஸாபராபாத்துக்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பஸ் போக்குவரத்தைத் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.நேற்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கசூரியுடன் இந்திய வெளியுறவுஅமைச்சர் நட்வர்சிங் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இந்த அறிவிப்பை இந்திய காஷ்மீர் பகுதி மக்களும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்களும் உணர்ச்சிப் பெருக்குடன் வரவேற்றுள்ளனர்.பலர் கண்ணீர் விட்டு அழுதபடி இரு நாட்டு அரசுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் உறவினர்களைச் சந்திக்க முடியாமல் தவிக்கும் இவர்களுக்கு இந்த பஸ் போக்குவரத்தும், இதுதொடர்பான எளிய விசா நடைமுறைகளும் பெரும் வரப் பிரசாதமாக இருக்கப் போகினறன.
இதே போல அம்ரிஸ்தர்-லாகூர் இடையிலும் பஸ் போக்குவரத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இரு பகுதிகளிலும்பிரிந்து வாழும் சீக்கியர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்கவும், இரு பகுதிகளிலும் உள்ள தங்களது புனித் தலங்களுக்கு பயணிக்கவும்வாய்ப்பு ஏற்படும்.
இந்தியா, பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்துள்ளன.
பிரச்சனைகளைத் தீர்க்கும் இரு நாடுகளின் இந்த கூட்டு முயற்சி பெரும் பாராட்டுக்குரியது என இங்கிலாந்து கூறியுள்ளது.
இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என அமெரிக்கா பாராட்டியுள்ளது.