ரூ. 100 கோடியில் சாலைகள்: சென்னை மாநகராட்சி பட்ஜெட்
சென்னை:
சென்னை மாநகராட்சியில் 2005-06ம் ஆண்டுக்கான வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் இன்றைய கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதிக்குழுத் தலைவர் விஜயராமகிருஷ்ணன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
ரூ. 11.55 கோடி உப நிதியுடன் கூடியதாக பட்ஜெட் வழங்கப்பட்டுள்ளது. 2005-06ம் ஆண்டுக்கான நிதி வருவாய் ரூ. 553.58 கோடியாகவும், செலவு ரூ. 544.03 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 100.20 கோடியில் சென்னை மாநகர சாலைகள் போடப்படும். பழைய சாலைகள் பராமரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்த ரூ. 25.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொசு உற்பத்தியைத் தடுக்க 1 லட்சம் மேல் நிலை குடிநீர்த் தொட்டிகளை மூடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
சென்னை நகர மக்களின் பொழுதுபோக்கு மையமாக விளங்கும் எலியட்ஸ் கடற்கரை, அன்னை வேளாங்கண்ணி கோவில் அருகே பார்வையாளர் அரங்கம்,ஆடை மாற்றும் அறைகள், கழிப்பிட வசதிகளுடன் கூடிய நவீன ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்படவுள்ளது.
6 சுடுகாடுகள் மின்சார மயானங்களாக மாற்றப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.
முன்னதாக கராத்தே தியாகராஜன் பேசுகையில், திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சரமாரியான புகார்களைத் தெவித்தார். இதைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.