சென்னை துறைமுகத்தில் பயங்கர தீ: 70,000 டன் நிலக்கரி சாம்பல்
சென்னை:
சென்னை துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 70,000 டன் நிலக்கரி எரிந்து சாம்பலானது.
சென்னை துறைமுகத்தின் 10வது நுழைவாயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இங்கு நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
தீ விபத்தில் இங்கு வைக்கப்பட்டிருந்த 70,000 டன் நிலக்கரியும் எரியத் தொடங்கியது. நிலக்கரி அனைத்தும் எரிந்ததால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் நடந்த போது அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இருப்பினும் தீ பரவத் தொடங்கியதுமே அவர்கள் அனைவரும் பத்திரமாக அங்கிருந்து தப்பி விட்டனர்.
ஒரிஸ்ஸாவின் மகாநதி பகுதியிலிருந்து இந்த நிலக்கரி கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இது மின் தயாரிப்புக்காக கர்நாடகத்திற்கு அனுப்பப்படவிருந்தது. தீயில் எரிந்த நிலக்கரியின் மதிப்பு ரூ. 50 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.