ராமதாஸ் போட்ட வரியில்லா பட்ஜெட்!
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாதிரி பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மாநில அரசுக்கு யோசனை தெரிவிக்கும் வகையில், மாதிரி பட்ஜெட்டை அவர் வெளியிட்டார். அதை கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, புதுவை பா.ம.க. எம்.பி. ராமதாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 3வது ஆண்டாக மாதிரி பட்ஜெட்டை வெளியிடுகிறோம். இது மாநில அரசுக்கு நல்ல ஆலோசனையாக அமையும் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப் பெரிய அளவில் உள்ளது. மொத்தம் 50 லட்சம் இளைஞர்கள், பெண்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நல்ல பல யோசனைகளை இந்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளோம்.
அரசுக்கு வர வேண்டிய வரி வசூலை முறையாக செய்தால் புதிய வரிகளே விதிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் பட்ஜெட்டில் யோசனை தெரிவித்துள்ளோம். வரி வசூலை எப்படி மேற்கொள்ளலாம் என்பதற்கான வழிமுறைகளையும் இதில் தெவித்துள்ளோம்.
அரசு தீட்டும் திட்டங்கள் பல மக்களை சென்றடைவதில்லை. அதை எப்படி மக்களுக்குப் பலன் தரும் திட்டமாக மாற்றுவது என்பதற்கான ஆலோசனைகளையும் இதில் தெரிவித்துள்ளோம். நாங்கள் கூறும்வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் அரசுக்கு ரூ. 1300 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
சட்டசபைத் தேர்தல் சீக்கிரமே வரும் என்று நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன் என்றார் ராமதாஸ்.