பிகாரில் தொங்கு சட்டபை: லாலுவுக்கு பெரும் சரிவு-- பாஸ்வான் கிங் மேக்கர்
டெல்லி:
பிகாரை கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டு வந்த லாலு பிரசாதுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 243 இடங்களில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெறும் 79இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
பா.ஜ.க.- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி 93 இடங்களில் வென்றுள்ளது.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 10 இடங்களில்வென்றுள்ளது.
மேலும் சுயேச்சைகள் மாயாவதியின் பகுஜன் சமாஜ், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி ஆகியவை 38 இடங்களில் வென்றுள்ளன.
ஆட்சியமைக்க குறைந்தது 122 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஸ்வான் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே லாலு பிரதாத் யாதவால் அங்கு ஆட்சியமைத்து தனது மனைவிராப்ரி தேவியை மீண்டும் முதல்வராக்க முடியும்.
ஆனால், லாலுவுக்கு எக் காரணம் கொண்டு ஆதரவு தர மாட்டேன் என பாஸ்வான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதனால் பாஸ்வானையே முதல்வராக்கத் தயாராக இருப்பதாகவும், அவருக்கு ஆதரவு தரத் தயார் என்றும் பாஜக-ஐக்கிய ஜனதா தளக்கூட்டணி கூறுகிறது. ஆனால், மதவாதக் கட்சியான பாஜகவுடன் கூட்டு சேர மாட்டேன் என பாஸ்வான் கூறிவிட்டார்.
இதனால் பிகாரில் படு குழப்பமான சூழல் நிலவுகிறது.
ரயில்வே துறையை தனக்கு விட்டுக் கொடுக்க லாலு முன் வந்தால், ஒருவேளை ராப்ரி தேவியை முதல்வராக்க பாஸ்வான் உதவுவார் என்றுகூறப்படுகிறது.
இதற்கிடையே சுமார் 38 இடங்களில் வென்றுள்ள சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளை வளைக்கும் வேலையில் லாலு பிரசாத்தும்பாஜகவும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன.
யாதவ்-முஸ்லீம்களின் ஓட்டுக்களை வைத்து இதுவரை லாலு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். இந்தக் கூட்டணியை பாஸ்வான்உடைத்துள்ளார். சுமார் 80 முஸ்லீம் வேட்பாளர்களை களத்தில் இறக்கி முஸ்லீம் ஓட்டுக்களில் ஒரு பகுதியை பாஸ்வான் வளைத்துவிட்டார்.இதனால் லாலுவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மதவாதக் கட்சியான பா.ஜ.க ஆட்சியமைக்காமல் தடுக்க, தன்னுடன் பாஸ்வான் கைகோர்க்க முன் வர வேண்டும் என லாலுபிரசாத் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எதிர்க் கட்சி வரிசையில் அமர தான் தயாராக இருப்பதாகவும், அடுத்த 2வருடங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை பிகாரில் அமல்படுத்தலாம் என்றும் பாஸ்வான் கூறியுள்ளார்.
படு குழப்பமான நிலை நிலவுவதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு லாலு-பாஸ்வான் இடையே சமாதானம்ஏற்படுத்தவும், பிகாரில் கூட்டணி அரசு உருவாக முயல்வார் என்றும் தெரிகிறது.
ராப்ரி-லாலுவுக்குப் பதிலாக வேறு ஒருவரை முதல்வராக அறிவித்தால், பாஸ்வான் ஆதரவு தர முன் வருவார் என்றும் கூறப்படுகிறது.