பிகார்: மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரும் லாலு
பாட்னா:
பிகாரில் தனது கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத்யாதவ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
243 பேர் கொண்ட பிகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 72 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 10இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 இடமும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும், சிபிஎம் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி) 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தக் கட்சிகள் அனைத்தும் தனக்கு ஆதரவு தரும் என்றும், மேலும் வெற்றி பெற்ற சுயேச்சைகள் 37 பேரில் பெரும்பாலானவர்கள் தனதுகட்சியில் சீட் கிடைக்காமல் போட்டியிட்டு வென்றவர்கள் என்பதால் அவர்களது ஆதரவும் தனக்கே இருப்பதாகவும் கூறியுள்ள லாலுபிரசாத், மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாக அறிவித்துள்ளார்.
மேலும் மத்தியில் தனது கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பாஸ்வானும் இடம் பெற்றுள்ளதால் பிகாரிலும் தனக்குஅவர் ஆதரவு தர வேண்டும் என லாலு கோரியுள்ளார். இக் கோரிக்கையை பாஸ்வான் நிராகரித்துவிட்டார்.
அதே நேரத்தில் பா.ஜ.க.- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கூட்டணியாக உருவாகியுள்ளது.
ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சி 28 இடங்களில் வென்றுள்ளது. பா.ஜ.க- ராம்விலாஸ் கூட்டணி அமைத்தால் அடுத்தஆட்சியை எளிதாக அமைக்க முடியும். இதற்காக பா.ஜ.க. முயன்று வருகிறது. பாஸ்வானுக்கு முதல்வர் பதவி தரவும் அக் கட்சி முன்வந்துள்ளது.
ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணி சேர பாஸ்வான் மறுத்து வருகிறார். யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்த வேண்டும் என்று கோரி வருகிறார்.
இதையடுத்து லாலு, பாஸ்வானுடன் பேச்சு நடத்தி சமாதானம் செய்யும் முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார்.பட்ஜெட் தாக்கலுக்குப் பின் இந்த இருவரிடமும் சோனியா பேசவுள்ளார்.
அதன் பின்னரே பிகாரில் ஆட்சி அமைவது குறித்து தெளிவான சூழல் உருவாகும்.
இந் நிலையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தேர்தல் முடிவு மூலம் மதவாத சக்திகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது. தேர்தலுக்கு முன் அமைக்கப்பட்டஎங்களது கூட்டணி தான் அதிகபட்ச இடங்களை வென்றுள்ளது.
மேலும் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களைப் பிடித்திருக்கும் கட்சியும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தான். இதனால் இங்கு நாங்களேஆட்சியமைப்போம்.
மேலும் ஜார்க்கண்டிலும் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு தருவோம். அங்கும் பா.ஜ.கவைஆட்சியமைக்க விட மாட்டோம் என்றார்.
இதற்கிடையே மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு வசதியாக, லாலுவின் மனைவியும் பிகார் முதல்வருமான ராப்ரி தேவிஇன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந் நிலையில் லாலு அல்லது பாஜகவுடன் இணைந்து எந்த ஆட்சியையும் அமைக்கப் போவதில்லை என்று பிகார் ஆளுநர் பூட்டாசிங்குக்கு ராம்விலாஸ் பாஸ்வான் இன்று அதிரடிக் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் அம் மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் ஏற்பட்டசிக்கல், மேலும் குழம்பி இடியாப்ப சிக்கலாகியுள்ளது.