ஆடிட்டர் வழக்கிலும் அப்ரூவராகிறார் ரவி சுப்பிரமணியம்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆக முடிவு செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ஆகியுள்ள ரவி சுப்பிரமணியம் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசுத் தரப்புமுதன்மை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை ராதாகிருஷ்ணன் வழக்கிலும் அப்ரூவர் ஆகுமாறு போலீஸார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து அந்தவழக்கிலும் அப்ரூவர் ஆக ரவி சுப்பிரமணியம் முடிவு செய்துள்ளார்.
சென்னை எழும்பூர் 6வது பெருநகர மாஜிஸ்திரேட் சாம்பசிவம் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் ரகசியவாக்குமூலம் தர விரும்புவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மனு ஒன்றையும் அளித்தார்.
இதைத் தொடர்ந்து 24 மணி நேர கால அவகாசம் கொடுத்த நீதிபதி அதன் பின்னர் வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்டார். ஆடிட்டர்வழக்கில் அப்ரூவர் வாக்குமூலம் அளிக்கவே எழும்பூர் நீதிமன்றத்தில் ரவி சுப்பிரமணியம் ஆஜர்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று அல்லது நாளை அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி ஆடிட்டர் வழக்கிலும் அப்ரூவர் வாக்குமூலம் அளிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கிலும் காஞ்சி தனிப்படை போலீஸார் குற்றப்பத்திரிக்கையை இறுதி செய்து தாக்கல்செய்வார்கள் என்று தெரிகிறது.