துரைமுருகனும், 234 மீன்களும்!
சென்னை :
வற்றிய கடலில் கடந்த முறை (நாடாளுமன்றத் தேர்தலில்) 40 மீன்களைப் பிடித்தோம். அடுத்து (சட்டசபைத்தேர்தலில்) 234 மீன்களையும் பிடிப்போம் என்று சட்டசபையில் திமுக துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது திமுக உறுப்பினர் தண்டாரப்பட்டு வேலு பேசுகையில்,
தமிழக அரசின் பட்ஜெட் ஒரு மெகா தொடர் போல உள்ளது. மெகா தொடரில் ஒரு வரி கதை தான் இருக்கும். அதுமாதிரி தான் இதிலும். மற்றபடி எல்லாம் வார்த்தை ஜாலமாகவே உள்ளது. ஒரு திட்டமும் இல்லை. திமுக ஆட்சியில்போட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.
அமைச்சர் பொன்னையன்: நீங்கள் திட்டத்தை அறிவித்துவிட்டு நிதியை ஒதுக்காமல் விட்டவர்கள்.
திமுக உறுப்பினர் அன்பழகன்: அந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்தத்திட்டத்தை செயல்படுத்தி பொன்னையனுக்குக் காட்டுவோம்.
அமைச்சர் ஜெயக்குமார்: தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று திமுக உறுப்பினர் தண்டாரம்பட்டு வேலுகூறுகிறார். அது கடல் வற்றி கருவாடு ஆகும் என்று காத்திருந்த கொக்கு உடல் வற்றிச் செத்தது போலத்தான் ஆகும்.
அப்போது எழுந்த துரைமுருகன், கடல் வற்றி நாங்கள் 40 மீன் பிடித்தோம். அடுத்து 234 மீன்களையும் பிடிப்போம்என்று கூறியபோது திமுக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
அதிமுக தரப்பில் முழு அமைதியைக் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications