கொலை: 29 நாட்களில் படுவேக தீர்ப்பு!
சென்னை :
29 நாட்களில் கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்து சாதனை படைத்துள்ளார் விரைவுநீதிமன்ற நீதிபதி செல்வகுமார்.
வழக்கமாக இந்தியாவில் கொலை வழக்குகள் வருடக் கணக்கில் நடக்கும். கொலை செய்தவர் போய்ச் சேர்ந்த பின்னர் கூட தீர்ப்புகள்வெளியானதும் உண்டு.
இந் நிலையில் தான் 29 நாட்கள் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது விரைவு நீதிமன்றம்.
கடந்த மாதம் 7ம் தேதி சென்னையைச் சேர்ந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியான முனுசாமி என்பவரை ஜெயராமன் என்பவர் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்தார். இதையடுத்து ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது.
21ம் தேதி இந்த வழக்கில் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து 14 சாட்சிகளிடம் நீதிபதி செல்வகுமார்விறுவிறுவென விசாரணை நடத்தினார். அதில் முனுசாமிக்கும் ஜெயராமனுக்கும் முன் விரோதம் இருந்தது தெளிவானது.
இதையடுத்து ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பை வழங்கினார் நீதிபதி.
கொலை நடந்த 29வது நாளில் கொலையாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் போலீசாரும் வேகமாகசெயல்பட்டனர். அதைவிட வேகமாக நீதிமன்றம் செயல்பட்டுள்ளது.