செங்கோட்டையன் விடுதலை; எதிர்த்து உச்ச நீதிமன்றம் போகிறது திமுக
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழல் வழக்கலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய திமுக முடிவு செய்துள்ளது
கடந்த அதிமுக ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியது. டுகாட்டுக்கு கொட்டகை போடுவதில் கூட ஊழல் நடந்தது. இலவச சேலைகளின் நீளத்தை அரை மீட்டர் வரை குறைத்து அதிலும் கூட காசு பார்த்தார்கள்.
அதே போல செங்கோட்டையன் வசம் இருந்த போக்குவரத்துத்துறையிலும் மகா ஊழல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பஸ்களுக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக செங்கோட்டையன் மீது தனி நீதிமன்றத்தில் திமுக ஆட்சியின்போது வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தார் செங்கோட்டையன், அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் செங்கோட்டையனை சமீபத்தில் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய திமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தீர்ப்பின் நகலைக் கேட்டு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், ஆலந்தூர் திமுக நகராட்சித் தலைவர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மனு செய்துள்ளனர்.
அதில், செங்கோட்டையன் அதிமுகவைச் சேர்ந்தவர். எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து அதிமுக அரசு மேல் முறையீடு செய்ய வாய்ப்பில்லை. திமுக ஆட்சியில்தான் செங்கோட்டையன் மீது வழக்கு தொடரப்பட்டது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மேல் முறையீடு செய்ய வசதியாக தீர்ப்பின் நகலைத் தர வேண்டும் என்று கோரி இருவரும் தனித்தனியாக மனு செய்துள்ளனர்.
டான்சி நில பேரத்தில் ஜெயலலிதா மீது வழக்குப் போட்டவர் இந்த ஆலந்தூர் பாரதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அன்பழகன் தான் உச்ச நீதிமன்றத்தை அனுகினார். இதனால் சொத்துக் குவிப்பு வழக்கே பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அதே போல இப்போது செங்கோட்டையன் விவகாரத்தையும் அன்பழகன் மூலமே உச்ச நீதிமன்றத்துக்கு திமுக கொண்டு செல்கிறது.