ரெட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம்: ஜெ அறிவிப்பு- திருமா பாராட்டு
சென்னை:
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்த தியாகி ரெட்டைமலை சீனிவாசனுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
இந்தியக் குடியரசுக் கட்சி உறுப்பினர் டாக்டர் செ.கு.தமிழரசன் இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், ரெட்டை மலை சீனிவாசனுக்கு சென்னை, திருச்சி அல்லது மதுரையில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று தமிழரசன் கோரினார்.
அவரது கோரிக்கையை ஏற்கிறேன். தமிழகத்தில் ரெட்டைமலை சீனிவாசனுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்றார்.
இந்த அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து தமிழரசன் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்ற முதல்வருக்கு எனது நன்றிகள். ஒன்றரை கோடி தாழ்த்தப்பட்ட மக்களும் முதல்வருக்கு எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்றார்.
சபாநாயகர் காளிமுத்துவும் முதல்வருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
1920ம் ஆண்டு ஆதி திராவிட மகாஜன சங்கம் என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனி அமைப்பை உருவாக்கியவர் சீனிவாசன். சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
லண்டனில் வட்ட மேஜை மாநாடு நடந்தபோது அண்ணல் அம்பேத்கருடன் அக் கூட்டத்தில் கலந்து கொண்டவர். நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
திருமாவளவன் நன்றி:
முதல்வரின் அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக விளங்கியவர் ரெட்டை மலை சீனிவாசன். அவரது நினைவைப் போற்றும் வகையிலும், தாழ்த்தப்பட்டோரின் நெடுங்காலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும் மணிமண்டபம கட்ட உறுதியளித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார் திருமா.












Click it and Unblock the Notifications