வாக்காளர் பட்டியல்: தேர்தல் அதிகாரி ஆய்வு
சென்னை:
தமிழக வாக்காளர் பட்டியல் சீரமைப்பு குறித்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்களுடன் மத்திய இணைதேர்தல் ஆணையர் ஏ.என்.ஜா இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை வந்த ஜா தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னதாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப்பணியை அவர் ஆய்வு செய்தார்.
அப்போது வாக்காளர் பட்டியல் சீரமைப்பு, போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு நீக்குவது உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் வாக்காளர் சீரமைப்புப் பணி தற்போது முழு வீச்சி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சீரமைப்புப் பணியில்பொது மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்தப் பணி முடிந்தால், போலி வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்றார் ஜா.
கடந்த தேர்தலில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து மாயமாய் மறைந்து போயின. இதற்கு திமுகஆதரவு அரசு ஊழியர்கள் மீது அதிமுக புகார் கூறியது. அதே போல அதிமுக அரசு மீது திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புகார்கூறின.
இதையடுத்து வாக்காளப் பட்டியல் சீரமைப்புப் பணியை மத்திய தேர்தல் ஆணையம் துவங்கியது.