நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு!!
டெல்லி:
குஜராத்தில் மதக் கலவரத்தை முன்னின்று நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அம் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு விசாவழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
இம் மாதம் 20ம் தேதி முதல் ஐந்து நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய மோடி திட்டமிட்டிருந்தார். புளோரிடாமாகாணத்தில் போர்ட் லாடரேட் என்ற இடத்தில் ஆசிய-அமெரிக்க ஹோட்டல் அதிபர்கள் சங்கத்தின் கூட்டத்தில் பேசவும்,நியூயார்க்கில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றவும், தொழிலதிபர்களை சந்திக்கவும் மோடி அங்கு செல்ல இருந்தார்.
இதற்காக முதல்வர் என்ற முறையில் டிப்ளோமேடிக் விசா எனப்படும் தூதரக சிறப்பு விசா கோரி அவர் விண்ணப்பம் தாக்கல்செய்திருந்தார்.
ஆனால், அந்த விண்ணப்பத்தை ஏற்க அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டது. அத்தோடு அவருக்கு ஏற்கனவேவழங்கப்பட்டிருந்த சுற்றுலா மற்றும் பிஸினஸ் விசாவையும் அமெரிக்கத் தூதரகம் ரத்து செய்துவிட்டது.
அமெரிக்காவின் தேசிய மற்றும் குடியேற்றச் சட்டத்தின் மதம் தொடர்பான பிரிவின் கீழ் மோடியின் விசா ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் டெல்லியில் இன்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், மதச் சுதத்திரத்துக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு விசா வழங்க அமெரிக்கக் குடியேற்றச் சட்டத்தின் 212(ஏ) (2) (ஜி) பிரிவு தடை விதிக்கிறது. இதனால் அவருக்குத் தரப்பட்ட டூரிஸ்ட் மற்றும் பிஸினஸ் விசா ரத்து செய்யப்படுகிறது.
டிப்ளோமேடிக் விசாவில் அமெரிக்காவுக்கு செல்லும் அளவுக்கு அவருக்கு அங்கு எந்த அரசுப் பணியும் இல்லை. இதனால்சட்டப் பிரிவு 214 (பி) பிரிவின் கீழ் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மோடி அமெரிக்காவுக்கு வந்தால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சில இந்திய-அமெரிக்க அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்திருந்தன. இதற்காக நியூயார்க், நியூஜெர்சி, கணக்டிகட் மாகாணங்களைச் சேர்ந்த அமைப்புகள் ஒன்றிணைந்துபடுகொலைகளுக்கு எதிரான ட்ரை-ஸ்டேட் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கின.
புளோரிடாவிலும் நியூயார்க்கிலும் மோடி பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படும்என்று இந்தக் கூட்டமைப்பு எச்சரித்திருந்தது.
இந் நிலையில் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
மோடிக்கு விசா மறுக்கப்பட்டதற்கு வட அமெரிக்க இந்திய-அமெரிக்கர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் இந்தச் சங்கம் நடத்த இருந்த பொதுக் கூட்டத்தில் தான் மோடி பேச இருந்தார்.
அவர் அரசியல் பேச வரவில்லை என்றும், இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் தொழில்துறை முதலீடுகள் குறித்து பேசவே அவர்வர இருந்ததாகவும் இந்தச் சங்கம் கூறியுள்ளது.