ஜெ. அரசின் குறுகிய மனப்பான்மை: கருணாநிதி
சென்னை:
திமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தமிழக அரசு குறுகிய கண்ணோட்டத்துடன் கிடப்பில் போட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதிகுற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தாம்பரம்-திண்டிவனம் இடையிலான நான்கு வழிப் பாதை திறப்பு விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மக்கள் நலனுக்காக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வருகிறது. தொடர்ந்து இந்தத் திட்டங்கள் மக்கள்நலனைக் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்படும். ஆனால் சிலருக்கு இதில் பொறாமை ஏற்பட்டுள்ளது.
எங்கே நமக்குக் கிடைக்க வேண்டிய பெயரை இவர்கள் தட்டி விடுவார்களோ என்ற பொறாமையில் அவர்கள் நடந்து கொள்கிறார்கள், வீண் புகார்கூறுகிறார்கள், அவதூறு பரப்புகிறார்கள். அவர்களை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
கடந்த திமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை, தற்போதைய அரசு குறுகிய மனப்பான்மையுடன் கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால் மத்தியில் இத்தகைய அநாகரீக நிலை இல்லை என்பது சந்தோஷம் தருகிறது.
வாஜ்பாய் ஆரம்பித்து வைத்த தங்க நாற்கர சாலைத் திட்டத்தை, பின்னால் வந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ்தலைவர் சோனியாகாந்தியும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
1974ம் ஆண்டு சென்னையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். அந்தப் பாலம் இப்போதும் வலுவாக நிற்கிறது.அதுபோல, காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையேயான அரசியல் நட்புப் பாலமும் வலுவாகவே இருக்கிறது.
நான் இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை சிலர் குறை கூறுகிறார்கள். நான் தவறாக எதையும் செய்யவில்லை, எனது நண்பரும்,மு ன்னாள்முதல்வரமுமான எம்.ஜி.ஆர் வழியைத்தான் பின்பற்றுகிறேன். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, மக்கள் நலத் திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில், உயர்அதிகாரியையோ, அமைச்சரையோ வைத்து தொடங்க மாட்டார். சாதாரண உழைப்பாளியை அழைத்துத்தான் தொடங்கச் செய்வார். அந்த வழியைத்தான்இப்போது நானும் பின்பற்றுகிறேன்.
மக்கள் நலன் தான் முக்கியம்,யார் தொடங்கி வைக்கிறார், யார் முடித்து வைக்கிறார் என்பது இப்போது பிரச்சினை இல்லை என்றார்.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில், இப்போது வேண்டுமானால் திமுக தலைவர் கருணாநிதி பதவியில் இல்லாமல்இருக்கலாம். ஆனால் இன்னும் 8 மாதத்தில் பதவியில் அமருவார் என்றபோது கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.