மார்க். கம்யூ பொது செயலாளரானார் காரட்
டெல்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொது செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக ஹர்கிஷன் சிங் சுர்ஜித்கூறியதையடுத்து புதிய பொது செயலாளராக பிரகாஷ் காரட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராகஅக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.வரதராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் டெல்லியில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. கூட்டத்தின் இறுதிநாளான இன்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
56 வயதான இவர் 1970ம் ஆண்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம்பயின்ற இவர், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
பலமுறை மாணவர் சங்க தலைவராக இருந்துள்ள இவர், எமர்ஜென்சி சமயத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அரசியல்போராட்டங்களுக்காக 2 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
1985ம் ஆண்டு டெல்லி மாநில செயலாளராகவும், 1992ம் ஆண்டு பொலிட் பீரோ உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இப்போதும் இவர் பொலிட் பீரோ உறுப்பினராக உள்ளார்.
இன்றைய கூட்டத்தில் பிரகாஷ் காரட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு உட்பட 18 பொலிட்பீரோ உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிரகாஷ் காரட்டின் மனைவி பிருந்தா காரட்டும், தமிழ்நாடு செயலாளர் கே.வரதராஜனும் அடங்குவர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் பெண் ஒருவர் பொலிட் பீரோ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவேமுதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.