திமுக பேச்சாளர் மலர்மன்னனை விரட்டிப் பிடித்து கைது செய்த போலீஸ்
ஆலந்தூர்:
ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் திமுக பேச்சாளர் மலர்மன்னனை போலீஸார் விரட்டிச்சென்று கைது செய்தனர்.
சென்னை பழவந்தாங்கல் பகுதியில் மார்ச் 31ம் தேதியன்று திமுக பொதுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய வெற்றிகொண்டான், மலர்மன்னன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் வளர்மதி ஆகியோரைப் பற்றி அவதூறாகவும்,அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக போலீஸ்காரர் ஒருவர், பழவந்தாங்கல் போலீஸில் புகார் செய்தார்.
இந் நிலையில், ஆலந்தூரில் 131வது வார்டு தேர்தலுக்காக திமுக வேட்பாளரை ஆதரித்து மலர்மன்னன் பிரசாரம் செய்து வந்தார்.இதையடுத்து உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்று மலர்மன்னனை கைது செய்ய முயன்றனர்.
இந்த வழக்கில் எந்த தகவலும் தெரிவிக்காமல் கைதுசெய்ய முடியாது என்று அங்கு கூடியிருந்த திமுகவினர் கூறினர். இதனால்போலீஸுக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மலர்மன்னன் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றார். இதைப்பார்த்த போலீஸார் அவரை விரட்டிச் சென்று பிடித்துகைது செய்தனர்.
இதற்கிடையே மலர்மன்னனை போலீஸார் அடித்து உதைத்தாக தகவல் பரவியதையடுத்து ஆலந்தூர் நகரசபை தலைவர்ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் பரங்கிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மலர்மன்னனை தாக்கவில்லை என்று போலீஸார் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
பிறகு மலர்மன்னனை போலீஸார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார். பின்னர் அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விரைவில் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டானையும் போலீசார் அமுக்குவர் என்று தெரிகிறது.
சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலில் அதிமுகவினர் கலவரம் செய்ய இருப்பதாகவும், அதைத் தடுக்க மத்திய ரிசர்வ்போலீஸ் படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஆளுநரை சந்தித்து திமுகவினர் மனு கொடுத்துள்ளநிலையில், திமுகவினர் மீது போலீசாரை பாய விட்டுள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications