மத்திய அரசை அகற்ற கம்யூனிஸ்டுகளுக்கு ஜெ. அழைப்பு
சென்னை:
மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை கம்யூனிஸ்ட்கட்சிகள் வாபஸ் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில், நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மணி, பாலபாரதிஆகியோர் பேசுகையில், எங்களது கட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ந்து எதிர்த்துவருகிறது என்று கூறினர்.
அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை பகிரங்கமாக எதிர்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கூறுகிறது. அதேபோல, அந்த அரசை பகிரங்கமாவும் அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
அரசின் கொள்கைகளை எதிர்ப்பதாக உங்களது கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, ஆட்சிக்குகொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுங்கள். மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போகவேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
இந்த அரசு மக்கள் விரோத அரசு. இந்த அரசை அகற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது எழுந்த, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அகற்ற வேண்டும் என்று முதல்வர்கூறுகிறார். அப்படி அகற்றினால், யார் தலைமையில் மாற்று அரசு அமையும் என்பதை முதல்வரால் கூற முடியுமா? என்று கேட்டார்.
அதற்கு ஜெயலலிதா, முதலில் ஆட்சியை அகற்றுங்கள். மாற்று அரசு குறித்து தானாக வழி பிறக்கும், ஏதாவது ஒரு மாற்று தானாக உருவாகும்என்றார்.