சென்னையில் 4 வயது சிறுவன் நரபலி
சென்னை:
சென்னையில், காணாமல் போன 4 வயது சிறுவன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டான். அவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வில்சன். இவரது மனைவி ரூத் மேரி. இவர்களுக்கு பெலோனியா என்ற 9 வயது மகளும், ஜாய்சன் எனும் 4 வயது மகனும் உள்ளனர்.
எங்கு தேடியும் ஜாய்சன் கிடைக்காததால் சோர்ந்து போன வில்சன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உதவி ஆணையர் சுகுமாறன் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு ஜாய்சனை போலீஸார் தேடி வந்தனர்.
இந் நிலையில் சவுல்ராஜ் ஆந்திராவுக்கு சென்றார். அங்கிருந்து வில்சனின் உறவினரான கிருபா என்பவருக்குப் போன் செய்து, இங்கு எனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதி உள்ளார். அவரிடம் மை போட்டுப் பார்த்தால் ஜாய்சன் இருக்குமிடம் தெரியும். அதற்கு ரூ. 10,000 வரை செலவாகும் என்று கூறியுள்ளார்.
சவுல்ராஜ் பேச்சில் சந்தேகம் அடைந்த கிருபா, தனிப்படை போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் தொடர்ந்து சவுல்ராஜிடம் பேச்சுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது ரூ.8000 பணத்திற்கு உடனே ஏற்பாடு செய்யும்படியும், ஆந்திராவுக்கு வரும்படியும் கிருபாவிடம் சவுல்ராஜ் கூறியுள்ளார்.
பின்னர் மீண்டும் சவுல்ராஜ், கிருபாவைத் தொடர்பு கொண்டு, பேசின் பாலம் அருகே ஜாய்சன் இருப்பதாக மந்திரவாதி கூறியுள்ளதாகவும், தான் அங்கு வருவதாகவும் கூறியுள்ளார் சவுல்ராஜ்.
நேற்று அதிகாலை வில்சன் வீட்டுக்கு சவுல்ராஜ் வந்தார். அப்போது வில்சனின் உறவினர்கள் பலர் வீட்டில் கூடியிருந்தனர். அனைவரையும் பேசின் பாலம் பகுதிக்கு அழைத்துச் சென்றார் சவுல்ராஜ். போலீஸாரும் அந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் தேடுவது போல பாவனை செய்த சவுல்ராஜ், ஒரு முட்புதரைக் காட்டி இங்கு தோண்டிப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். அந்தப் புதரிலிருந்து துர்நாற்றம் வந்தது. புதரைத் தோண்டிப் பார்த்ததில், சிறுவன் ஜாய்சன், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தான்.
இதைப் பார்த்ததும் வில்சனும், அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பிணத்தை மீட்ட போலீஸாருக்கு சவுல்ராஜ் மீது சந்தேகம் வலுத்தது. உடனடியாக அவரை அங்கிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்று உரிய முறையில் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சவுல்ராஜுக்கு திருமணமாகி விட்டது. ஆனால் குழந்தைகள் இல்லை. ஆனால் தனக்கு அண்ணன் முறையாகும் வில்சனுக்கு அழகான 2 குழந்தைகள் இருந்தது அவரது கண்களை உறுத்தியது. சவுல்ராஜுக்கு மந்திரவாதிகள் சிலருடன் தொடர்பு இருந்தது. தானும் ஒரு நாள் பெரிய மந்திரவாதி ஆவேன் என்றும் கூறி வந்திருக்கிறார்.
இதனால், சவுல்ராஜை தங்களது குழந்தைகளுடன் பழக விடாமல் வில்சன் தம்பதியினர் தடுத்துள்ளனர். இதனால் சவுல்ராஜ் ஆத்திரமடைந்துள்ளார். வில்சனின் குழந்தைகள் மீது அவருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் ஒரு நாள் சவுல்ராஜ், சிறுவன் ஜாய்சனை சரமாரியாக அடித்துள்ளார். அதில் சிறுவன் பரிதாபமாக இறந்து விட்டான். இதையடுத்து அவனை தூக்கிச் சென்று அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக துண்டு துண்டாக வெட்டி சிதைத்து பேசின் பாலம் அருகே முட்புதரில் புதைத்துள்ளார் சவுல்ராஜ்.
சவுல்ராஜ் இப்படிக் கூறினாலும், நரபலி கொடுக்கவே சிறுவனை சவுல்ராஜ் கொன்றிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். சவுல்ராஜை கைது செய்துள்ள போலீஸார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications