அமைச்சர்களை அதிகாரிகள் சந்திக்கத் தடை!
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிக்கு வரும் அமைச்சர்களை, சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சென்று சந்திக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அலுவலக ரீதியான பயணத்தை மத்திய அமைச்சர்களோ, மாநில அமைச்சர்களோ மேற்கொள்ளக் கூடாது.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில், அமைச்சர்களை சென்று சந்திப்பதை எந்தத் துறை அதிகாரியாக இருந்தாலும் சரி, தவிர்க்க வேண்டும். அமைச்சர்கள் அழைத்தாலும் செல்லக் கூடாது.
தனிப்பட்ட முறையில் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் வந்தால் அவர்களை சந்திக்கும் அதிகாரிகள் மீதுஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனைக்கும் அவர்கள் உட்படுத்தப்படுவர்.
அமைச்சர்கள், தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்குள் வரும்போது அவர்களது காரில் சுழல் விளக்கோ, சைரன் ஒலியோ பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.