தலைமைச் செயலாளராக நாராயணன் நியமனம்
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக என். நாராயணன் பதவியேற்றுக் கொண்டார்.
தலைமைச் செயலாளராக இருந்து வந்த லட்சுமி பிரானேஷ் வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதியத் தலைமைச் செயலாளராக, தற்போது நிதித்துறை செயலாளராகவும், வளர்ச்சித் துறை ஆணையராகவும் இருந்து வரும் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலையே நாராயணன் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார் லட்சுமி பிரானேஷ்.
தனது 22வது வயதிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனவர் நாராயணன். நினைவாற்றலில் சிறந்தவர் என்பதால், சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் மனித கம்ப்யூட்டர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர் நாராயணன்.
நாராயணன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நிதித்துறைச் செயலாளராக ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளராகவும் இருந்து வந்தார்.
ஞானதேசிகன் வகித்து வந்த பொறுப்புகளுக்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications