டிஎஸ்பி விவகாரம்: எஸ்பி பொன் மாணிக்கவேல் இடமாற்றம்
சென்னை:
ஓமலூர் டி.எஸ்.பி. மாயமான விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் புதிய பொறுப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.
அவரைத் தேடும் பணியில் மேற்கு மண்டல காவல்துறையே தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மணிரத்தினம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது கடிதத்தில் கூறியிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சர்ச்சையில் சிக்கிய பொன் மாணிக்கவேலிடம் டிஜிபி அலெக்சாண்டர் தொலைபேசியில் பேசினார். டிஐஜி தமிழ்ச் செல்வனும் பொன்மாணிக்கவேலிடம் விசாரணை நடத்தினார். மேலும் கூடுதல் டிஜிபி ராமானுஜமும் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது பொன் மாணிக்கவேல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஆறுமுகம் புதிய சேலம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொன் மாணிக்கவேலுவுக்கு புதிய பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே மேட்டுப்பாளையம் லாட்ஜில் மணிரத்தினம் தங்கியிருந்தபோது 12க்கும் மேற்பட்ட கடிதங்களை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எழுதியுள்ளார். அதில், பொன் மாணிக்கவேல் தன்னை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினார் என்பதை அவர் விரிவாக விவரித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஒரு முறை குற்றச் செயல்கள் தடுப்பு குறித்த கூட்டத்தில், முன் வரிசையில் அமர்ந்திருந்த மணிரத்தினத்தை, இன்ஸ்பெக்டர்கள் அமர்ந்திருந்த வரிசையில் போய் அமருமாறு உத்தரவிட்டுள்ளார் பொன் மாணிக்கவேல்.
மணிரத்தினத்திற்கு, அதிரடிப்படையில் பணியாற்றி அதன் மூலம் கிடைத்த பதவி உயர்வையும், பொன் மாணிக்கவேல் அடிக்கடி கிண்டல் செய்வாராம். சப் இன்ஸ்பெக்டராக கூட இருக்க லாயக்கில்லாதவர் மணிரத்தினம் என்று மற்ற அதிகாரிகள் முன்பு கிண்டலாக கூறியுள்ளார் பொன் மாணிக்கவேல் என்று மணிரத்தினம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.