சேலம் மாவட்ட எஸ்பி யார்?: குழப்பம்
சேலம்:
பொன் மாணிக்கவேலுவுக்கு பதிலாக சேலத்தில் புதிய எஸ்பியாக பதவியேற்ற ஆறுமுகம், திடீரென சென்னை புறப்பட்டு சென்றார். இதனால் அம்மாவட்டத்தில் எஸ்பி யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட எஸ்பியாக பொன் மாணிக்கவேல் கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வந்தார். மிகவும் கறார் பேர்வழி என்று பல இடங்களில் பெயர் வாங்கிய இவருக்கு சேலம் மாவட்டத்திலும் பொது மக்களிடையே நல்ல பெயர் கிடைத்தது.
இந்த சமயத்தில் தான் டிஎஸ்பி மணிரத்தினம் மூலம் அவருக்கு கெட்ட நேரம் தொடங்கியது. டிஎஸ்பி மாயமான விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக பொன் மாணிக்கவேல் அதிரடியாக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆறுமுகம் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் நேற்று பிற்பகலில் வயர்லெஸ் மைக்கில் ஒவ்வொரு ஸ்டேஷனாக தொடர்பு கொண்டு பேசிய பொன் மாணிக்கவேல், என்னென்ன வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று கேட்டு விட்டு எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு ஓடிப்போகக் கூடாது என்று போலீஸாருக்கு அறிவுரை கூறினார்.
மாயமான மணிரத்தினத்தை பொன் மாணிக்கவேல் மறைமுகமாக சுட்டிக் காட்டுவதற்காகவே இவ்வாறு கூறியதாக தெரிகிறது. இதன் பிறகு நேற்று மாலை 5 மணியளவில் பொன் மாணிக்கவேல் புறப்பட்டு சென்றார்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணியளவில் சேலம் வந்த புதிய எஸ்பி ஆறுமுகம் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இரவோடு இரவாக பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசினார்.
திடீர் குழப்பம்:
புதிய எஸ்பி பதவியேற்ற செய்தி பத்திரிகைகளில் அச்சாக தயாராக இருந்தது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக நள்ளிரவில் எஸ்பி அலுவலகத்திலிருந்து அனைத்து பத்திரிகை அலுவலகங்களையும் தொடர்பு கொண்டு புதிய எஸ்பி பதவி ஏற்ற செய்தியை பிரசுரிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
பழைய எஸ்பியே தொடர்ந்து பணியில் நீடிக்கிறார் என்றும் கூறினர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. எஸ்பி தனிப்பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது புதிய எஸ்பி யார் என்று தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பொன் மாணிக்கவேல் மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு அப்படியே இருப்பதாகவும் புதிய எஸ்பி ஆறுமுகம் 4ம் தேதி பதவி ஏற்பார் என்றும் கூறினார்.
ஆனால் நேற்றே ஆறுமுகம் பதவி ஏற்றுவிட்டாரே என்று கேட்ட போது அதற்கு அந்த அதிகாரி பதலளிக்க மறுத்து விட்டார்.
இதற்கிடையே ஆறுமுகம் நேற்று இரவு திடீரென சென்னை புறப்பட்டு சென்றார். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, புதுக்கோட்டையிலிருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டுள்ள எனக்கு பணியில் சேர 10 நாட்கள் அவகாசம் உள்ளது.
எனவே நல்ல நாளாக பார்த்து வருகிற புதன்கிழமை (4ம் தேதி) பதவி ஏற்றுக் கொள்கிறேன். அதுவரை எஸ்பியாக பொன் மாணிக்கவேலே நீடிப்பார் என்றார்.
முதலில் இரவோடு இரவாக பதவியேற்று, பிறகு பழைய எஸ்பியே பதவியில் நீடிப்பதாக கூறியிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.