நாளை காலை 11 மணிக்குள் தேர்தல் முடிவுகள்- நரேஷ் குப்தா
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் முடிவுகள் நாளை காலை 11 மணிக்குள் தெரிந்து விடும் என்று தலைமை தேர்தல்கமிஷனர் நரேஷ் குப்தா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று மிக அமைதியாக நடந்து முடிந்தது. இந்தசாதனைக்கு சொந்தக்காரர் தேர்தல் சிறப்பு பார்வையாளர் ராவ் தான் என்றால் அது மிகையில்லை.
இந் நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாகூறுகையில், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும். 11 மணிக்குள் முடிவுகள் தெரிந்து விடும்.
காஞ்சிபுரத்துக்கான வாக்கு எண்ணிக்கை அங்குள்ள பச்சையப்பன் கல்லூரியில் நடைபெறும். கும்மிடிப்பூண்டிக்கான வாக்குஎண்ணிக்கை பெருமாள்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக்கில் நடைபெறும். இந்த இரு இடங்களுக்கும் மின்னணுஎந்திரங்கள் நேற்று பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
இரு தொகுதிகளிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி தேர்தல் மிக அமைதியான முறையில் நடந்தது என்றார் நரேஷ்குப்தா.