மரக்காணத்தில் மீனவர்கள் பெரும் மோதல்: போலீஸ் தடியடி
மரக்காணம்:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதில் அதிமுக பிரமுகர் ஒருவர் பாகுபாட்டுடன் நடந்துகொண்டதையடுத்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பெரும் மோதல் ஏற்பட்டது.
மரக்காணம் அருகே உள்ள சிப்பிக்குப்பம், செட்டி நகர் பகுதியில் மீனவர்களுக்கு சுனாமி நிவாரண நிதியை வழங்குவதில்பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் செல்வம் என்பவர் தனக்கு வேண்டியமீனவர்களுக்கு மட்டும் நிவாரண நிதியை வாங்கிக் கொடுத்ததாக எதிர்தரப்பு மீனவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந் நலையில் இன்று காலை இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின்னர்வன்முறையாக வெடித்தது. அரிவாள்கள், கற்கள், கட்டைகளால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
உடனடியாக போலீஸார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். கலவரம் மற்றும் வன்முறை தொடர்பாக 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அப் பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அதிக அளவில் ஆயுதப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும்போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.