சன் டிவி மட்டுமே இருக்க திமுக நினைக்கிறது: பாஜக
சென்னை:
தமிழகத்தில் சன் டிவி மட்டுமே இருக்க வேண்டும். மற்ற எந்த டிவியும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சர்வாதிகாரப் போக்குடன் திமுக நடந்து கொள்கிறது எனதமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஏற்கனவே ராஜ் டிவி செய்திகளை ஒழித்தாகி விட்டது. அடுத்து ஜெயா டிவி செய்திகளை முடக்கவும் நடவடிக்கை தொடங்கி விட்டது. அதையும் செய்து விட்டால், 24மணி நேர நியூஸ் சானல் நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்ற எண்ணத்தில் திமுக உள்ளது.
சன் டிவி மட்டுமே வாழ வேண்டும், மற்ற டிவிக்களை ஒழிக்க வேண்டும் என்ற சர்வாதிகார போக்கில் திமுக நடந்து கொள்வது ஜனநாயக விரோதமானதாகும்.
அத்வானி ராஜினாமாவை நாடகம் என்று வர்ணிக்க திமுக தலைவர் கருணாநிதிக்குத் தகுதியில்லை. ஒரு அரசியல் கட்சித் தலைவர் ராஜினாமா செய்வதும், பின்னர்ஏதோ சில காரணங்களுக்காக வாபஸ் பெறுவதும் அரசியல் வரலாற்றில் புதிதான விஷயமல்ல.
இதே திமுக தலைவர் கருணாநிதி முன்பொருமுறை ராஜினாமா செய்வதாக அறிவித்து பின்னர் அதையொட்டி பெரும் பிரச்சினையை உருவாக்கி, அதன் பின்னர் தனதுராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்ததும் மக்களுடைய மனதிலிருந்து மறைந்திருக்கலாமே ஒழிய, அரசியல் வரலாற்றில் கரை படிந்த பக்கமாகவே இன்னும்உள்ளது.
ஜூலை மாதம் 9, 10 தேதிகளில் சென்னையில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளது. இதில் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட அகில இந்தியத்தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார் ராதாகிருஷ்ணன்.