மதுரையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் படுகொலை
மதுரை:
இந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரான காளிதாஸ் மதுரையில் இன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
பிற்பகலில் முனிச்சாலை இஸ்மாயில்புரம் 8வது தெருவில் உள்ள ஒரு கடை முன் நின்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரை கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த காளிதாஸ் உயிர் தப்புவதற்காக அங்கிருந்து ஓடினார். இருந்தும் அந்த இருவரும் காளிதாஸை ஓட ஓடவிரட்டிச் சென்று வெட்டித் தள்ளினர்.
ரத்த வெள்ளத்தில் துடித்த காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இச் சம்பவத்தையடுத்து அப் பகுதியில் பெரும் பதற்றம்பரவியது. கடைகள் அடைக்கப்பட்டன.
போலீஸார் விரைந்து வந்து காளிதாஸ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பீபிகுளம் உள்ளிட்ட மதுரையின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.