திமுக விழாவாக மாறும் சேது சமுத்திர விழா!
மதுரை:
மதுரையில் ஜூலை 2ம் தேதி நடைபெறவுள்ள சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா, திமுக மாநாடு போல மாறி வருவதாககூட்டணிக் கட்சிகள் முணிமுணுக்கின்றன.
மதுரை வண்டியூர் அருகே உள்ள மஸ்தான்பட்டியில் சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா ஜூலை 2ம் தேதி மாலை 4மணியளவில் நடைபெறவுள்ளது. பிரதமர், காங்கிரஸ் தலைவர், திமுக தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ள இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் படு தீவீரமாக நடந்து வருகின்றன.
மத்திய அரசு விழாவாக இருந்தாலும், முற்றிலும் திமுகவினர் தான் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.மஸ்தான்பட்டியைச் சுற்றிலும் திமுக கொடிகள் தான் பட்டொளி வீசிப் பறக்கின்றன. விழா மைதானப் பகுதியிலும் திமுகதொண்டர்கள் தான் அதிக அளவில் காணப்படுகின்றனர்.
உள்ளூர் திமுக தலைவர்கள், மதுரை மேயரான திமுகவைச் சேர்ந்த செ.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தினசரி மைதானத்திற்கு வந்துபணிகளை மேற்பார்வையிடுகிறார்கள். அவ்வப்போது டி.ஆர்.பாலுவும் வந்து செல்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியை வரவேற்றும், வாழ்த்தியும் மதுரை நகருக்குள்ளும், மஸ்தான்பட்டி பகுதியிலும் 50 டிஜிட்டல்பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. இது தவிர வரவேற்பு தோரணங்கள், மதுரை விமான நிலையம் முதல் விழா நடைபெறும்மஸ்தான்பட்டி வரையிலும் கொடிகள் என திமுகவினர் கலக்கி வருகின்றனர்.
இத்தனை ஏற்பாடுகள் செய்தும் திமுகவினரிடையே லேசான கவலை ஒன்றும் உள்ளது. 40 இடங்களில் வரவேற்பு வளைவுகள்கட்ட அனுமதி கோரியிருந்தோம். ஆனால் 20 வளைவுகளுக்குத் தான் காவல்துறை அனுமதி கிடைத்தது என்று அவர்கள்கவலைப்படுகிறார்கள்.
திமுகவினர் இத்தனை செய்கையில், மத்தியில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் சும்மா இருக்க முடியுமா? அவர்களும் தடபுடலாகபிரதமர், காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்பு தெரிவித்து ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள், வரவேற்பு வளைவுகள், கொடிகள்என கலக்கத் தான் செய்கின்றனர்.
ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி திமுகவினரின் ஆதிக்கம் வலுவாக இருப்பதை கண் கூடாக காண முடிகிறது. திகவினரின்இந்தப் போக்கால், மற்ற கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.
சேது சமுத்திரத் திட்டம் தன்னால் வந்தது என்ற பெயரை சம்பாதிக்க திமுக துடிப்பதாகவும், இதனால் தான் மத்திய அரசுவிழாவை திமுக மண்டல மாநாடு போல நினைத்து ஏற்பாடுகளில் மூக்கை நுழைத்தும், திமுக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகளைசெய்தும் ஆதிக்கம் செலுத்துகிறது திமுக என்று அவர்கள் புலம்புகிறார்கள்.
திகவினரின் காரியங்களைப் பார்த்தால், சேது சமுத்திரத் திட்டத்தை அரசியலாக்கி அதில் லாபம் சம்பாதிக்க திமுக நினைப்பதாகமுதல்வர் ஜெயலலிதா கூறியது உண்மை தான் போலும் என்று மக்கள் நினைக்கப் போகிறார்கள் என்றும் அவர்கள்கவலைப்படுகிறார்கள்.
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா தொடர்பான ஏற்பாடுகளில், பணிகளில் திமுகவினர் மட்டுமே அதிக அளவில் ஈடுபட்டுவருகின்றனர். காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஏதாவது உதவி செய்ய முன்வந்தால் கூட, நீங்கஇருங்கண்ணே நாங்க பார்த்துக்குறோம் என்று கூறி விடுகிறார்களாம்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி, அரசியல் விழாவாக மாறி வருவதை மக்களும் பார்த்துக் கொண்டு தான்உள்ளனர்.