காவிரியில் கூடுதல் நீர் திறப்பு?: தரம்சிங் இன்று ஆலோசனை
பெங்களூர்:
கபினி அணை நிரம்பியுள்ளதால் தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீர் திறப்பது குறித்து கர்நாடக முதல்வர் தரம்சிங் அம்மாநிலஅமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 1000 கன அடி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது.
இந்த நீர் தற்போது மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந் நிலையில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதாலும்,கபினி அணையின் பாதுகாப்பு கருதியும், கபினியிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடுவது குறித்து உயர் அதிகாரிகளுடன்ஆலோசனை செய்ய தரம்சிங் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் தரங்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இதில் கபினி அணை நிரம்பி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு கூடுதல் நீர்திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க கர்நாடகம் தயாராக உள்ளது.
கர்நாடகத்தின் வட பகுதிகளில் பருவ மழை பொய்த்துள்ளது. இதனால் அங்கு ஏற்படக் கூடிய நெருக்கடியை சமாளிக்கத்தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றார்.
இன்று தரம்சிங் தலைமையில் பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர், நீர்ப்பாசனத் துறைஅதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications