காவிரி: மத்திய குழு நாளை தமிழகம், கர்நாடகத்தில் ஆய்வு
டெல்லி:
தமிழகம் மற்றும் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்த 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசுஅமைத்துள்ளது. இந்தக் குழு நாளை (வெள்ளிக்கிழமை) இரு மாநிலங்களிலும் ஆய்வை தொடங்குகிறது.
இதேபோல திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் டெல்லி சென்று பிரதமர்மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மனு கொடுத்தனர். கருணாநிதியும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவை உடனடியாக கர்நாடகத்திற்கு அனுப்பிஅணைகளில் நீர் இருப்பை ஆய்வு செய்யச் சொல்வதாக பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவிடம் உறுதியளித்தார்.
ஆனால் அதற்கு மாறாக தற்போது 3 அதிகாரிகள் கொண்ட குழு மட்டும் கர்நாடகம் செல்லவிருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளரும், காவிரி கண்காணிப்புக் குழு தலைவருமான ஜே.ஹரி நாராயணன்கூறுகையில், மத்திய நீர் ஆணையம், வேளாண் துறை அமைச்சகம், நீர் வளத்துறை ஆகியவற்றிலிருந்து தலா 1 அதிகாரி என 3பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்று கர்நாடகம் மற்றும் தமிழக அணைகளில் நீர் இருப்பு நிலவரம்குறித்து ஆய்வு செய்யும். 3 நாள் ஆய்வுக்குப் பின்னர் திங்கள்கிழமை பிரதமரை சந்தித்து தங்களது அறிக்கையை அளிப்பர்.
பிரச்சனை தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே தான். காவிரியைப் பொருத்தவரை தற்போது நிலைமை அவ்வளவுமோசமாக இல்லை. நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு, கபினியிலிருந்து கூடுதலாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றார் ஹரி நாராயணன்.
இதற்கிடையே, திமுக உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியை புதன்கிழமை சந்தித்து காவிரிப் பிரச்சினை தொடர்பாக கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
அவர்களிடம் பேசிய சோனியா காந்தி இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மத்தியஅமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.