சாயப்பட்டறை: நிதியுதவி செய்ய பிரதமருக்கு ஜெ. கோரிக்கை
சென்னை:
திருப்பூர் சாயப்பட்டறைகளில் கழிவு நீரை அகற்றும் சாதனத்தை நிறுவ மத்திய ஜவுளித்துறை முழு அளவில் நிதியுதவி செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் நிர்ணயித்த அளவுமாசுக்களை வெளியேற்றுவதற்குத் தேவையான புதிய சாதனத்தைப் பொருத்தும் சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவேண்டும். இதன் மூலம் நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் இப்பிரச்சினைக்கு முடிவு வரும்.இந்தப் பிரச்சினையில் மத்திய ஜவுளித்துறை உடனடியாகத் தலையிட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு தர வேண்டியதுஅத்துறையின் கடமையாகும்.
தற்போதைய மத்திய ஜவுளித்துறையின் கொள்கைத் திட்டத்தில், மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகளுக்கு நிதியுதவி தரத்தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை விலக்கி, முழு உதவியையும் மத்திய அரசு அளிக்க வேண்டும்.
ஏற்கனவே திருப்பூர் சாயப்பட்டறை அதிபர்கள் கருவியை அமைப்பதற்கான 25 சதவீத நிதியைத் தருவதாக கூறியுள்ளனர்.எனவே இந்த விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும்.
திருப்பூர் பின்னலாடைத் தொழில் மூலம் நமது நாட்டுக்கு கணிசமான அளவுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.எனவே அரசின் முழு நிதியுதவியையும் பெற சாயப்பட்டறை அதிபர்கள் முழுமையாக தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இந்தியாவின் பெயரை உலக அளவில் நிலைநாட்டுவதில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்கள் முக்கியப் பங்குவகிக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.