தா.கி. வழக்கு: வேறு மாவட்டத்திற்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை மதுரையிலிருந்து, வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரியமனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை கே.கே.நகர் பகுதியில் கடந்த 2003ம் ஆண்டு மே 20ம் தேதி அதிகாலையில் தா.கிருட்டிணன் வாக்கிங் சென்றபோதுபடுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி உள்ளிட்ட 13பேர் கைது செய்யப்பட்டனர்.அழகிரி, ஸ்டாலின் கோஷ்டி மோதலின் விளைவாகவே தா.கி கொலை செய்யப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகின.
இந்த வழக்கு தற்போது மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் தனக்கு பல்வேறுதரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாக வழக்கை விசாரித்து வந்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மாவட்ட தலைமை செஷன்ஸ்நீதிபதிக்கு கடிதம் எழுதினார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.
அதேசமயம், வழக்கை விசாரிக்கும் நீதிபதி, மு.க.அழகிரிக்கு மிகவும் வேண்டியவர். எனவே நீதிபதியை மாற்ற வேண்டும்என்று கோரி அண்ணா நகர் காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந் நிலையில், தா.கி.யின் தம்பி ராமையா உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்குமதுரையில் விசாரிக்கப்பட்டால் நீதி கிடைக்காது. மேலும், நீதிபதி குற்றவாளிகளில் ஒருவருக்கு மிகவும் நெருக்கமானவர்என்று கூறப்படுகிறது. எனவே வேறு மாவட்டத்திற்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, ராமையாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார். விசாரணையை வேறுமாவட்டத்திற்கு மாற்றினால்,அது மேலும் கால தாமதத்திற்கே வழி வகுக்கும். நீதிபதியின் விசாரணை குறித்து சந்தேகப்படத்தேவையில்லை.
மேலும், வழக்கை இழுத்துக் கொண்டே போனால் சாட்சிகளின் ஞாபக சக்தி குறைந்து போய் அவர்களால் நடந்த சம்பவத்தைதெளிவாக கூற முடியாத நிலை ஏற்படும்.
எனவே மதுரை நீதிமன்றத்திலேயே வழக்கு விசாரணை நடைபெறும். விசாரணையை விரைவில் முடிக்க தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்திருந்தார்.