கராத்தே மீது ஆற்காடு தம்பி அவமதிப்பு வழக்கு
சென்னை:
நில அபகரிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் மீது, திமுக பொருளாளர் ஆற்காடுவீராசாமியின் தம்பி தேவராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் மாநிகராட்சிக்குச் சொந்தமான 18 கிரவுண்டு நிலத்தை ஆற்காடு வீராசாமியும், அவரது தம்பிகுடும்பத்தினரும் அபகரித்து விட்டதாக துணை மேயர் கராத்தே தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலம் மீட்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து தியாகராஜனுக்கு ஆற்காடு வீராசாமி வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் ஆற்காடுவீராசாமியின் தம்பி தேவராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், சென்னை அண்ணா நகர் பெரியகூடல் கிராமத்தில் 18 கிரவுண்டு நிலத்தை பெங்களூரைச் சேர்ந்த ஒருநிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கினோம். இதுதொடர்பாக சிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கு விசாரணையின்போது, இந்த விஷயத்தில் மாநகராட்சி, மேயர், துணை மேயர், ஆட்சித் தலைவர் என யாருமேதலையிடக் கூடாது என்று 2001ம் ஆண்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் இந்த உத்தரவை அவமதிக்கும் வகையில், உண்மைக்குப் புறம்பான தகவல்களை கராத்தே தியாகராஜன் தொடர்ந்துகூறி வருகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே கராத்தே தியாகராஜனை தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.