பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை: சு.சுவாமி
சென்னை:
தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டடோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதை வரவேற்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,இந்தக் கல்லூரிகளுக்காக மாநில அரசுகள் நயா பைசா கூட செலவழிப்பதில்லை. இதனால் இந்தக் கல்லூரிகளில் அரசுக்கோட்டா என்ற பெயரில் இட ஒதுக்கீடு கோர அரசுகளுக்கு எந்த உரிமையும் இல்லை.
கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் தலித்துகளைத் தவிர வேறு எந்த ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்துக் கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு இந்துக் கூட்டணியை உருவாக்கி போட்டியிடதிட்டமிட்டுள்ளோம்.
ஜெயேந்திரரை கைது செய்ததன் மூலம் அதிமுக அரசு இந்து விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இதை எதிர்க்க ஒரு இந்துகூட்டணி அவசியமாகிறது.
உத்தரப் பிரதேசமும் மத்தியப் பிரதேசமும் ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதைப் போல தமிழகமும்கர்நாடகமும் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார் சுவாமி.