பாஜக ஆட்சியில் ரூ. 500 கோடி மெகா ஊழல்: விசாரணைக்கு உத்தரவு
டெல்லி:
பாஜக ஆட்சியில் மிக அமைதியான அமைச்சராக இருந்து கொண்டே மெகா ஊழல் செய்துள்ளார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அனந்த் குமார்.
இவரது துறையில் நடந்துள்ள ரூ. 500 கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த அனந்த்குமார் ஹட்கோ நிறுவனத்தின் சார்பில், தனக்கு வேண்டியவர்களுக்கு, ஒரே நாளில் ரூ. 500 கோடி (கோடி என்பதை நன்றாகப் படிக்கவும்) கடன் வழங்கும் முடிவை எடுத்துள்ளார்.
இந்த முடிவை இவரும் சில ஹட்கோ உறுப்பினர்களும் மட்டும் சேர்ந்து எடுத்துள்ளனர்.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் சேமா, வரியவா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், இது தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்புக் கமிஷன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஹட்கோ டைரக்டர்கள் யாரிடமும் கலந்து பேசாமல் அனந்த்குமாரும் சில பகுதி நேர ஹட்கோ உறுப்பினர்களும் மட்டும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ரூ. 500 கோடி கடன் வழங்கும் முடிவை எடுத்துள்ளார் அனந்த்குமர்.
மேலும் அமைச்சராக இருந்தபோது தனது மொபைல் போன் கட்டணத்தையும் தனது தனிப்பட்ட செலவுகள் பலவற்றையும் ஹட்கோவில் இருந்து செலுத்தச் செய்துள்ளார். இதற்காக பல லட்சங்களை அழுதுள்ளது ஹட்கோ.
மேலும் இவர் அமைச்சராக இருந்தபோது பெங்களூரில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான ஸ்டார் ஹோட்டலில் பல சூப்பர் டீலக்ஸ் ரூம்களை வருடக்கணக்கில் நிரந்தரமாக புக் செய்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
ஓசியில் புக் செய்யப்பட்ட இந்த ரூம்களால் ஹோட்டலுக்கு மாதந்தோறும் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இங்கு வைத்துத் தான் தனது ஆர்எஸ்எஸ், பாஜக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தார் அனந்த்குமார்.
பின்னர் இந்த ஹோட்டல் நஷ்டத்தில் இயக்குவதாகக் கூறி அதையும் பாஜக ஆட்சியில் குறைந்த விலையில் தனியார் ஒருவருக்கு விற்றுவிட்டுப் போய்விட்டனர் என்பது தனிக்கதை.