சென்னை, குமரி, கடலூரில் தொடரும் கடல் கொந்தளிப்பு!
சென்னை:
சென்னை, கன்னியாகுமரி, கடலூர் பகுதிகளில் தொடர்ந்து 2வது நாளாக திங்கள்கிழமையும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடல் பகுதிகளில் பலவேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெளர்னமி, அமாவாசைதினங்களில் வழக்கமாக கடல் கொந்தளிப்பு காணப்படும். ஆனால் சுனாமிக்குப் பிறகு இந்த தினங்களில் வழக்கத்தை விட அதிகஅளவில் கடல் கொந்தளிப்பும், ஊருக்குள் கடல் நீர் புகுவதும் அதிகரித்துள்ளது.கடந்த பெளர்னமி தினத்தன்று சென்னை, கடலூரில் கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்தது. சென்னை அருகே எண்ணூரில் சிலபகுதிகளில் அதிக அளவில் கடல் நீர் உட் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலையில் அமாவாசை தினமான வெள்ளிக்கிழமை முதல் கடல் கொந்தளிப்பு அதிகம் உள்ளது. எண்ணூர், கடலூர்,கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிக சீற்றத்துடன் கடல் காணப்பட்டது. சனிக்கிழமை இந்த ஊர்களின் சிலபகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இன்று இரண்டாவது நாளாக கடல் சீற்றம் அதிகம் காணப்படுகிறது.
கொளச்சல், முட்டம், மார்த்தாண்டம், கடியப்பட்டனம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகம் உள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இருப்பினும் இப்பகுதிகளில் கடல் நீர் வீடுகளுக்குள் புகவில்லை.